கர்நாடகா மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹோண்ணூறு சுவாமி. அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும், ஹோண்ணூறு சுவாமிக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிராமத்தில் உள்ள சுடுகாடப்பா சுவாமில் கோவிலில் ஊர் மக்கள் படை சூழ உறவினர்கள் முன்னிலையில் தம்பதிகளுக்கு திருமணம் தடபுடலாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு வரவேற்பு நிகழ்ச்சியிலும் தம்பதியர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தன்னிலை மறந்து காணப்பட்ட புது மாப்பிள்ளை நெஞ்சு வலி தாங்காமல் மேடையில் அமர்வதும், எழுவதுமாய் அவஸ்தை பட்டார். மேலும் தனக்கு நெஞ்சுவலிப்பதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். அஜீரண கோளாறாக இருக்கலாம் என கருதிய உறவினர்கள் புது மாப்பிள்ளைக்கு சோடா கொடுத்ததாக கூறப்படுகிறது.
சோடா குடித்ததும் சுயநினைவை இழந்த ஹோண்ணூறு சுவாமி மேடையிலே திடீரென மயங்கி விழுந்தார். கிராம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹோண்ணூர் சுவாமியை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு கூறியாதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஹோண்ணூர் சுவாமி உயிரிழந்தாக கூறப்படுகிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணமகன் உயிரிழந்ததால், விழாக்கோலம் பூண்டிருந்த கிராமம் சோகத்தில் உறைந்துள்ளது.
– இரா.நம்பிராஜன்