தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை குரோம்பேட்டையில், தமிழ் மாநில காங்கிரஸின் 9-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸின் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மறைந்த கட்சி பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பது, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பத்தை இத்தொகுப்பில் பார்ப்போம்.
கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு தமிழகத்தில் மீண்டும் பிரிவினைவாத சக்திகள் தலைதூக்கி வன்முறை கலாச்சாரம் ஏற்படுவதைத் தடுக்க குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதை பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலையை திமுக தலைமையிலான கட்சிகள் தியாகிகள் போல் சித்தரித்துக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு இது போன்ற சட்ட விரோத செயல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் தள்ளுபடி, விவசாய நகை கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து விட்டு நிறைவேற்றாமல் உள்ளனர். எனவே அவற்றை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.







