நீதிமன்றம் அனுமதி அளித்தால் லியோ திரைப்படத்தின் 6 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
11 அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் 2023-2024 கல்வியாண்டில் சேர 1607விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன. அதில் 420 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. முதல் 10 மாணவ, மாணவியர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆளுநரும் அண்ணாமலையும் ஒன்று தான். ஆளுநர் தான் அண்ணாமலை. அண்ணாமலை தான் ஆளுநர் என அமைச்சர் ரகுபதி கூறினார்.
கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டுக்கு பதில்:
“நடிகர் விஜயைப் பார்த்து ஆளும் திமுக அரசு பயப்படுகின்றது. அதனாலேயே அவரது லியோ திரைப்படத்திற்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை திமுக அரசு விதித்துள்ளது” என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, நாங்கள் சினிமாவில் எந்த வித தடையும் போட்டு திரை உலகத்துடன் எதிர்ப்பை பெற்றுக்கொள்பவர்கள் அல்ல என்றார். மேலும் அவர் கூறியதாவது:
திரை உலகம் எங்களுடை நட்பு உலகம். திரை உலக்த்தோடு எப்போதும் நெருங்கிய நட்பாக இருப்போம் , வெறுப்பை சம்பாதிக்க முதலமைச்சர் விரும்ப மாட்டார்.
அதிமுக ஆட்சியில் திரைத்துறையை என்ன பாடுபடுத்தினார்கள் என தெரியும். திரைத்துறையை முடக்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை. அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கம் படுத்துகிறோம். சின்ன தயாரிப்பாளர்களின் படங்களும் வெளியாக உதவுகிறோம்.
திரை உலகம் செழிப்பாக இருக்க திமுக. அரசு தான் காரணம். லியோ சர்ச்சையைப் பொறுத்தவரை 6 காட்சிகள் கொடுத்தால் தான் பிரச்னை. 5 காட்சிகள் என்னும் போது 9 மணிக்கு முதல் காட்சி, அதையும் ரசிகள் தான் பார்ப்பார்கள். நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை 4 மணி காட்சிக்கு அரசு அனுமதியளிக்கும்”
இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.







