ஆளுநருடன் தமிழ்நாடு அரசு மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இருபத்தி ஏழாவது கிளையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 25 நபர்களுக்கு கடன் உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற கூட்டத்தொடர் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி நல்ல முறையில் நடந்ததாகவும், பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஆன்லைன் சூதாட்ட பாதிப்பு குறித்து தெரிந்ததால் தான் இருக்கிற சட்டத்தை வைத்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டம் ரத்து தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்டத்தில் சரத்துகள் சரியில்லை என்று கூறி நீதிமன்றம் ரத்து செய்தது. அது போல் இல்லாமல் சட்டத்திலேயே பல்வேறு திருத்தம் கொண்டு வந்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறினார்.
இந்த மேல்முறையீட்டில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், தீர்ப்பு வந்த பிறகு ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று கூறினார். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று தான் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நிச்சயமாக ஆன்லைன் சூதாட்டம் ஏழை எளிய மக்களின் நலனுக்காக ரத்து செய்யப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரோடு தமிழ்நாடு அரசு மோதல் போக்கை கடை பிடிக்கவில்லை. ஆளுநர் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக என்றைக்குமே திமுக ஒரே நிலைப்பாட்டை தான் கொண்டுள்ளது. தற்போது அது ஜனாதிபதி ஒப்புதலுக்காக உள்ளது. மேலும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். கண்டிப்பாக கட்சதீவு மீட்பதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என கூறினார்.
Advertisement: