அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்ந்த மாணவிகள்!

அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் முதல் சுற்று கலந்தாய்வில் 40,287 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ள நிலையில், மாணவர்கள் விட 10 ஆயிரத்து 219 மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12…

அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் முதல் சுற்று கலந்தாய்வில் 40,287 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ள நிலையில், மாணவர்கள் விட 10 ஆயிரத்து 219 மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் மே மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8 ஆம் தேதி முதல் மே மாதம் 22 ஆம் தேதி வரையில் பதிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு கல்லூரியில் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது. 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்க்ள பெறப்பட்டன. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ் மொழி பட்டப்படிப்பு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. அந்தக் கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நடத்தப்பட்ட முதல் சுற்றுக் கலந்தாய்வில் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் இன்று முதல் 20 ஆம் தேதி வரையில் 2ம் கட்டக் கலந்தாய்வும் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 219 மாணவிகள் மாணவர்களை விட கூடுதலாக சேர்ந்துள்ளனர். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் 10,918 பேர் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

முதல்முறையாக அரசுக் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வுச் செய்தப்பின்னர் வேறுக் கல்லூரியில் சேர்வதை தவிர்க்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் கல்லூரிக் கல்வி இயக்குனரின் இணையதளத்தில் இருந்து அனுமதிக் கடிதம் பெற்றப்பின்னர் தான் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்தக் கலந்தாய்வின் மூலம் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 34 மாணவர்கள், 25 ஆயிரத்து 253 மாணவிகள். 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 10,918 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.