நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுத்து அவரைப் பாதுகாக்கவே போராட்டக்காரர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்து அடக்கி வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசுக்கு எதிரான போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு நடந்த அவமானத்தைப் போல் தற்போதைய அதிபர் ரணிலும் சந்திக்க வேண்டி வரும்.
69 லட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என்று மார்தட்டி வீர வசனம் பேசிய கோத்தபய இறுதியில் இலங்கையைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார். இன்று எந்த நாடும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் அவர் மீண்டும் இலங்கைக்கு வர முயற்சி செய்கிறார்.
கோத்தபயவிற்கு அடைக்கலம் கொடுத்து அவரைப் பாதுகாக்கவே போராட்டக்காரர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்து அடக்கி வருகின்றார். ஆனால், இதன் விபரீதத்தை அவர் விரைவில் எதிர்கொள்வார் என்றார் சரத் பொன்சேகா.








