சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனை அடுத்து மூத்த நீதிபதி எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 8 மாதங்களாக தலைமை நீதிபதி பணியிடம் நிரப்பப்படமால் இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், எஸ்.வி.கங்கா பூர்வாலாவை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கங்கா பூர்வாலா கடந்து வந்த பாதை:
கடந்த 1962-ம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா, எல்.எல்.பி பட்டப்படிப்பு தகுதி வரிசையில் மூன்றாமிடம் பிடித்து 1985-ம் ஆண்டு வழக்கறிஞராக பயணத்தை தொடங்கினார். விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் கடன் மீட்பு தீர்ப்பாயம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.
தொடர்ந்து 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக எஸ்.வி. கங்கா பூர்வாலா நியமிக்கப்பட்டார். மேலும், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள கங்கா பூர்வாலா, அடுத்தாண்டு மே 23-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.
- பி.ஜேம்ஸ் லிசா