உலகில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிபந்தனையின்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சண்டையிட்டு வரும் நிலையில், ஜி7 நாடுகளின் மாநாடு ஜெர்மனியில் தற்போது நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் உறுதியுடன் நிற்கப் போவதாக அறிவித்துள்ள ஜி7 நாடுகள், இது தொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அதில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சண்டையிட்டு வருவதன் காரணமாக, உலகில் உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கு ரஷ்யாவே பொறுப்பு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிபந்தனயின்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
நெருக்கடியான இந்த காலகட்டத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கவும், தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட விளை பொருட்களின் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்கவும் முடிவெடுத்துள்ளதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன.
ஐரோப்பாவின் உணவுப் பொருள் உற்பத்தி மையாக உக்ரைன் திகழ்ந்து வருகிறது. உலக அளவில் கோதுமை உற்பத்தியில் 10 சதவீதமும், மைதாவில் 17 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய்-ல் 50 சதவீதமும் உக்ரைனில் உற்பத்தி செய்யப்படுகிறது.
போர் காரணமாக உக்ரைனில் உணவுப் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் 4.7 கோடி மக்கள் உணவின்றி தவிக்கும் பேராபத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் 96 சதவீதம் கருங்கடல் வழியாகவே நடைபெற்று வந்த நிலையில் போர் காரணமாக அந்த பாதை அடைபட்டுள்ளது.
உக்ரைனில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் தடுப்பது மட்டுமல்லாது அவற்றை ரஷ்யா திருடவும் செய்கிறது என்றும் ஜி7 நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
ரஷ்ய போரை எதிர்கொள்வதற்கு ஏற்ப உக்ரைனின் வலிமையை அதிகரிக்கவும், இதற்காக ஆயுதங்களை அதிக அளவில் அளிப்பதோடு, உலவுத் தகவல்களை பகிரவும் முடிவெடுத்துள்ளன.










