சென்னையில் 37 பள்ளிகளில் பரிட்சார்த்த முறையில் காலை இலவச சிற்றுண்டி திட்டம்!

சென்னையில் 37 பள்ளிகளில் 5941 மாணவ மாணவியருக்கு பரிட்சார்த்த முறையில் காலை இலவச சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் அண்ணா துரையின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15 ஆம்…

சென்னையில் 37 பள்ளிகளில் 5941 மாணவ மாணவியருக்கு பரிட்சார்த்த முறையில் காலை இலவச சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் அண்ணா துரையின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15 ஆம்
தேதி, காலை இலவச சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில்
தொடங்கி வைக்க உள்ளார். சென்னை உட்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில்
37,740 மாணவ மாணவியர், மேலும் 23 நகராட்சிகளில் அமைந்துள்ள 163 பள்ளிகளில்
17,427 மாணவ மாணவியர் என தமிழ்நாடு முழுவதும் 1.14 லட்சம் மாணவர்களிடம் இந்த
திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியை பொறுத்த வரையில் வரும் 16 ஆம் தேதி முதல்
இந்த காலை இலவச சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வர உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 37 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்
பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 5941 மாணவ மாணவியருக்கு
பரிட்சார்த்த முறையில் சிற்றுண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் காலை இலவச சிற்றுண்டி திட்டத்திற்காக சென்னை மாநகராட்சி சார்பாக
மாநகரட்சி வடக்கு வட்டாரதிற்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 6 இடங்களில் பொது
சமையல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர்,
ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ நகர், திருவொற்றியூர்
மண்டலத்திற்குட்பட்ட எஸ்.என். செட்டி தெரு, எண்ணூர் அன்னை சிவகாமி நகர், எண்ணூர்
தாழங்குப்பம் நிவாரண மையம், டிரக்ட டெர்மினால் -பெருநகர சென்னை வளர்ச்சி
குழுமம் உள்ளிட்ட 6 இடங்களில் பொது சமையல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.