டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் அரையிறுதி போட்டியில் இன்று பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப்1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து (7 புள்ளி), இங்கிலாந்து (7 புள்ளி), குரூப்2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா (8 புள்ளி), பாகிஸ்தான் (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குரூப்1ல் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகள் பெற்ற போதிலும் ரன்ரேட்டில் பின்தங்கியதால் வெளியேற நேரிட்டது. இந்த நிலையில் சிட்னியில் இன்று முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானுடன் மோதுகிறது.
சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து அணிகளை வீழ்த்திய நியூசிலாந்து, இங்கிலாந்திடம் மட்டும் தோற்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதுவரை டி20 உலக கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணிக்கு, அந்த கனவை அடைவதற்கான முதற்படி இன்றைய ஆட்டமாகும்.
அதே சமயம் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்தியா, ஜிம்பாப்வேயிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவி, அதன் பிறகு நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேச அணிகளை சாய்த்து சரிவில் இருந்து மீண்டது. நெதர்லாந்து அணி தனது கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியதன் பலன் பாகிஸ்தானுக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்தது.
கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. அந்த வெற்றி பாகிஸ்தானுக்கு அசாத்திய நம்பிக்கை கொடுக்கும். மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதவுள்ளன.
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இதுவரை டி20 கிரிக்கெட்டில் 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் நியூசிலாந்தும், 17-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.