இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணிக்கு 249 ரன்கள் இலக்கு!

முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 249 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சால்ட் மற்றும் டக்கெட் சிறப்பாக ஆடினர். இவர்களில் சால்ட் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து டக்கெட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹாரி புரூக் டக் அவுட் ஆனார். தொடர்ந்து, ஆடிய ஜோ ரூட் 19 ரன்களில் வெளியேறினார். இவர்களை அடுத்து ஆடிய பட்லர் மற்றும் பெத்தேல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். பட்லர் 52 ரன்களிலும், பெத்தேல் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து, களமிறங்கிய ஆர்ச்சர் 21 ரன்களில் வெளியேறிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.