பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது நண்பர்களுடன் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.பிரதமர் பதவியை அவமதிக்கும் வகையிலும், களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சன்னா மரின் நடந்து கொண்டதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
உலகின் இளம் வயது பிரதமர் என்ற பெருமைக்குரியவர் பின்லாந்துப் பிரதமர் சன்னா மரின். சோசியல் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த இவர் தனது 34-வது வயதில் பின்லாந்து நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். தனது துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் புகழ் பெற்ற சன்னா மரின் உலகின் சிறந்த பிரதமர் என்ற பட்டத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக கொரோனா காலத்தில் இவரது அரசாங்கம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது எனப் பலரும் பாராட்டு தெரிவித்தனர். 55 லட்சம் மக்களைக் கொண்ட பின்லாந்தில் 370-க்கு கொஞ்சம் அதிகமான மரணங்கள் மட்டுமே நிகழ்ந்தன, அந்த அளவிற்கு கொரோனாவை மிகச் சிறப்பாகக் கையாண்டனர்.
இவ்வாறு தனது நடவடிக்கைகள் மூலம் புகழ்பெற்ற சன்ன மரினுக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. கொரோனா காலத்தில் விதிகளை மீறி பார்ட்டியில் கலந்துகொண்டார் எனச் சர்ச்சை எழுந்தது. அதே போன்று தற்போதும் பார்ட்டி ஒன்றில் சன்னா மரின் நடனமாடும் காணொலி சமூகவலைத்தளங்களில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பார்ட்டியில் சன்னா மரின் போதைப்பொருளை உட்கொண்டு இருந்ததாகவும், மதுபோதையில் நண்பர்களுடன் சுய நினைவை இழந்த நிலையில் நடனமாடியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளன.
அண்மைச் செய்தி: ‘புதிய பைக் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?’
இதுகுறித்து விளக்கமளித்த சன்னா மரின் போதைப்பொருள் சோதனைக்கான கோரிக்கை நியாயமற்றது என்று கருதுவதாகவும், தமது சொந்த சட்டப் பாதுகாப்பிற்காகவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், போதை மருந்து பரிசோதனை செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சன்னா மரினுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது. பொறுப்பான பதவியில் இருப்பவர் அதற்கேற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பிரதமராக இருந்தாலும் அவருக்கென தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் எனவும் கருது தெரிவித்து வருகின்றனர்.
– சந்தோஷ்.