2019-ம் ஆண்டு கால்பந்து ரசிகர்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று, ஃபிஃபாவினுடைய சிறந்த ரசிகருக்கான விருது பெற்ற தாய் மற்றும் மகனை பற்றி விரிவாகக் காணலாம்.
கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வம் இந்தியாவைக் காட்டிலும், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் அதிகமாக காணப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த கால்பந்து விளையாட்டை கொண்டாடும் ரசிகர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் சிறந்த ரசிகர்களை ஃபிஃபா அமைப்பு கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறந்த ரசிகர் என்ற விருதுக்காக தேர்ந்தெடுக்கபட்ட ஒரு தாயும் மகனும், உலக கால்பந்து ரசிகர்களுடைய கவனத்தைப் பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சில்வியா கிரெக்கோ என்ற ஒரு பெண்மனி, தன் மகன் நிகோலாஸின் சந்தோசத்துக்காக ஒவ்வொரு கால்பந்து போட்டியின் போதும், அவனை அந்த போட்டி நடைபெறும் இடத்திற்கு கூட்டிச் சென்று சந்தோஷப்படுத்துவது வழக்கம். இது இயல்பான ஒன்றுதான் என்று எண்ணலாம். இதை கவுரவப்படுத்தவே ஃபிஃபா இவர்களுக்கு இந்த விருதை வழங்கினார்களா? என்ற கேள்வியும் உதிக்கலாம்.
சில்வியாவினுடைய வளர்ப்பு மகனான நிக்கோலஸ், 5 மாதம் முன்கூட்டியே பிறந்தவர். வெறும் அரை கிலோ எடையுடன் பிறந்த நிக்கோலஸ், பிறக்கும் போதே ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக, அவருக்கு கண்களுடைய விழித்திரை உருவாகவே இல்லை. இதனால் பார்வை சவாலுடைய சிறுவனாக இருந்த நிக்கோலஸ், மன இறுக்கத்தில் இருந்ததால், அவர் தனக்குள் இருக்கும் குறையை பெரிதாக உணரக்கூடாது என்பதற்காக, வீட்டின் அருகே நடைபெறும் ஒவ்வொரு கால்பந்து போட்டியின் போதும், அவரை சில்வியா அங்கு அழைத்து செல்வார்.
சிறுவயது முதலே கால்பந்து ரசிகையான சில்வியா, தன்னுடைய மகனுக்கு ஒவ்வொரு போட்டி நடக்கும் போதும் மைதானத்தில் நடக்கும் போட்டி குறித்து கமெண்டரி பண்ணி அவரை மகிழ்ச்சிப்படுத்துவார். இதை புரிந்துகொண்ட நிக்கோலஸ், தன்னிடம் உள்ள குறையை பொருட்படுத்தாமல், தனது அம்மா கூறும் கமெண்டரியை கேட்பார். இதனால் ஒவ்வொரு போட்டிக்கு போகும் போதும், அவருடைய ரேடியோ ஹெட்செட்டையும் கையிலயே எடுத்துச் செல்வார் நிக்கோலஸ்.
ஒரு நாள் வழக்கமான ஒரு போட்டியில் நிக்கோலஸும், தாய் சில்வியாவும் சேர்ந்து ஆட்டத்தை கண்டுகொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த போட்டியின் வருணனையாளர் இவர்கள் இரண்டு பேரும், ஏதோ செய்துகொண்டிருப்பதை பார்க்க, அவர்கள் பக்கம் கேமராவை திருப்ப சொல்லி, அதை பதிவு செய்துள்ளார். அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு, சில்வியாவும் நிக்கோலஸும் மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கினர்.
இந்த சம்பவம் ஃபிஃபா அமைப்புக்கு தெரிய வந்த நிலையில், பலரது பேராதரவுடன், இந்த தாய் மற்றும் மகன், இரண்டு பேரையும் கவுரவிக்க விரும்பி, 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரசிகர்களுக்கான விருதுக்கு நாமினேட் செய்து, ரசிகர்களை வாக்களிக்கவும் செய்தது ஃபிஃபா. அதனடிப்படையில் ஏறத்தாழ 58.36 சதவிகிதம் ரசிகர்களின் வாக்குகளைப் பெற்ற இந்த தாய்க்கும் மகனுக்கும், ஃபிஃபா விருது வழங்கி கவுரவித்தது. தாய்ப்பாசத்தை மிக அழகாக வெளிப்படுத்தும் இதனை கேட்கும் அனைவருக்கும், இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல.