பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் தந்தை அப்துல் காதீர் கான் காலமானார். அவருக்கு வயது 85.
பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் டாக்டர் அப்துல் காதிர் கான். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் பர்வேஷ் கட்டாக் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கல் செய்தியில், ‘டாக்டர் அப்துல் காதிர் கானின் மறைவு வருத்தம் அளிக்கிறது. நாட்டுக்கான அவர் சேவைகளை பாகிஸ்தான் என்றென்றும் கவுரவிக்கும். பாகிஸ்தானின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அவர் ஆற்றிய பங்கு சிறப்பானது’ என்று தெரிவித்துள்ளார்.
லிபியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வழங்கியதாக அப்துல் காதிர் கான் மீது கூறப்பட்ட புகாரை, 2004-ம் ஆண்டு அவர் ஒப்புக்கொண்டார்.
மறைந்த அப்துல் காதிர் கான், இந்தியாவில் உள்ள போபாலில் 1936 ஆம் ஆண்டு பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு அவர் குடும்பம் இடம்பெயர்ந்தது.