2 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் அஜித் குமார் – ‘விடா முயற்சி’-யை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘விடா முயற்சி’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

அஜித் குமார் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து இதுவரை டீசர், டிரெய்லர் உட்பட மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் குமாரின் திரைப்படம் திரைக்கு வருவதால், யு/ஏ சான்றிதழ் பெற்ற  ‘விடா முயற்சி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. அதற்கேற்ப இப்படத்தின் டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படம்  இன்று(பிப்.06) வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களுக்கு சென்று அதிகாலை 6 மணி காட்சியை காட்சியை பார்த்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு இப்படத்திற்கு இன்று காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியிருந்தது. அதனால், காலை முதலே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் அஜித் குமார் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, அவரது பேனருக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில்  ‘விடா முயற்சி’  திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.