பிரபல தென்கொரிய நடிகை மரணம்!

பிரபல தென் கொரிய நடிகை கிம் சே-ரோன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிம் சே-ரோன் (24). இவர், கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தி மேன் ஃப்ரம் நோவேர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப்படத்தில் அவர் கடத்தப்பட்ட குழந்தையாக நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் விருதுகளை அள்ளிக் குவித்தார்.

இதையும் படியுங்கள் : அமெரிக்காவை புரட்டிப் போட்ட கனமழை – 9 பேர் உயிரிழப்பு!

கடந்த 2022ம் ஆண்டு, மது போதையில் வாகனம் ஓட்டிய விவகாரத்திற்காக இவருக்கு 20 மில்லியன் வொன் (சுமார் $13,800) அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பிறகு, அவர் மீது மக்கள் எதிர்மறையான எண்ணங்களை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் புதிய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இவர் சிரமங்களை சந்தித்தாகவும் சொல்லப்படுகிறது.

இவர் சூல் நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று உயிரிழந்த நிலையில்  மீட்கப்பட்டார். கிம் சே-ரோனின் மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், அவர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் எனவும் அந்நாட்டு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். கிம் சே-ரோனின் மரணம் திரைப் பிரபலங்கள், ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.