டைட்டானிக் கப்பலைப் பாா்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்ற டைட்டன் நீா்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியது தொடா்பாக சா்வதேச நிபுணா்கள் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டைட்டானிக் கப்பல் சென்றுகொண்டிருந்தது. ஏப்ரல் 14-ம் தேதி இரவில் எதிர்பாராதவிதமாக பனிப்பாறையின் மேல் அந்த கப்பல் மோதியது. மூழ்க வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட அந்த கப்பல், 3 மணி நேரத்தில் நீரில் முழுவதுமாக மூழ்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கோர விபத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 1500 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்து 110 ஆண்டுகள் ஆனாலும் கப்பல் பயண வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது. கடலுக்குள் மூழ்கிய அந்தக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கிடந்தது 1985ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஆனால் கடும் சேதம் அடைந்ததால் டைட்டானிக் கப்பலை கடலுக்கு மேலே இழுத்து வர முடியவில்லை.
அதனால் டைட்டானிக் கப்பலை ஆழ்கடலுக்கு சென்று ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்புக்காக திரைத்துறையினரும் சென்று வருகின்றனர். இந்நிலையில், டைட்டானிக் கப்பலை சுற்றுலா பயணிகள் பார்வையிட அழைத்து செல்லும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்தது. டைட்டன் நீா்மூழ்கி என அழைக்கப்படும் அதில் 5 பேர் பயணிக்க முடியும்.
இந்நிலையில், டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை காண்பதற்காக கடந்த 19ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டன் என்ற நீர்மூழ்கி மூலம் 5 பேர் ஆழ்கடல் சுற்றுலா சென்றனர். அதில் மூன்று சுற்றுலா பயணிகள், ஒரு பைலட் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி என மொத்தம் 5 பேர் இருந்தனர். கனடாவின் நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் இருந்து பயணத்தை தொடங்கிய சுமார் இரண்டு மணி நேரத்திலேயே நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து நீர்மூழ்கியை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், நீர்மூழ்கி வெடித்துச் சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் இறந்துவிட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது. நீர்மூழ்கியில் சென்ற 5 பேரையும் இழந்துவிட்டதாக ஓஷன்கேட் நிறுவனமும் கூறியுள்ளது. டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டன் நீர்மூழ்கியின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ள அமெரிக்க கடலோரப் படை, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என தெரிவித்திருந்தது.
இதையடுத்து, டைட்டானிக் கப்பலைப் பாா்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்ற டைட்டன் நீா்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியது தொடா்பாக சா்வதேச நிபுணா்கள் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், டைட்டன் நீா்மூழ்கி விபத்து தொடா்பான விசாரணையில் உலகின் பல்வேறு நாடுகளையும் சோ்ந்த புலனாய்வு அமைப்புகள் பங்கேற்றுள்ளன.
அமெரிக்க கடலோரக் காவல் படை, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பிரான்ஸ் கடல் விபத்து விசாரணை வாரியம், பிரிட்டன் கடல் விபத்து விசாரணை வாரியம் ஆகிய அமைப்புகளைச் சோ்ந்த நிபுணா்கள், டைட்டன் நீா்மூழ்கி விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், மீட்கப்பட்ட பாகங்களில் பயணம் செய்தவர்களின் உடல் பாகங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மீட்கப்பட்ட சிதைந்த பாகங்களை அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது தான் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கான காரணம் தெரியவரும் என சம்பந்தப் பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.