அதீத உடற்பயிற்சி மாரடைப்புக்கு காரணமா என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தி திரையுலகை சேர்ந்த காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான ராஜு ஸ்ரீவஸ்தவா (58) ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, மாரடைப்பு காரணமாக கீழே சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
40 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல, உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு என்பது குறித்த செய்திகள் அண்மைக் காலமாக நம்மை சுற்றிய வண்ணம் உள்ளன.
உண்மையிலேயே உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவர்களிடம் வினவினோம்…
இதுபற்றி நம்மிடம் பேசிய உளவியல் மருத்துவர் சித்ரா அரவிந்த், “நாள் ஒன்றுக்கு 45 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், உடல் பிட்னஸாக இருக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் 2- 3 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்கின்றனர். இது தவறானது. முறையான உடற்பயிற்சி, சரியான தூக்கம், ஆரோக்கியமான உணவு பழக்கமே உடலை வலிமை உடையதாக மாற்றும்; உளவியல் ரீதியாகவும் Fit ஆக இருக்க வழிவகுக்கிறது.
ஒரே மாதத்தில் உடல் எடையைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டும் என்பதற்காக அதீத உடற்பயிற்சி செய்வதோ, பட்டினி டயட் உள்ளிட்ட முறைகளை பின்பற்றுவதோ ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதன் காரணமாக மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகம். ஆகவே, சரியான ஆலோசகர் இல்லாமல் உடற்பயிற்சி மேற்கொள்வது என்றுமே ஆபத்து தான் ” என எச்சரிக்கிறார்.
– காயத்ரி வேல்முருகன்







