சிங்கப்பூரில் தங்கி இருக்கும் இலங்கை முன்னாள் முதிபர் கோத்தபய ராஜபக்ச, அங்கு மேலும் 14 நாட்கள் தங்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ரஜபக்சவுக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்கள் காரணமாக அவர் பதவி விலகும் முன்பாக கடந்த 13ம் தேதி இலங்கையில் இருந்து மாலத்தீவு சென்றார். பின்னர் அங்கிருந்து கடந்த 14ம் தேதி சிங்கப்பூர் சென்றார்.
சிங்கப்பூரில் 2 வாரங்கள் தங்க அவருக்கு விசா வழங்கப்பட்டது. விசா காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று மேலும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூர் அரசு விசா வழங்கியுள்ளது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்த்தன, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மறைந்திருக்கவில்லை என்றும், அவர் சிங்கப்பூரில் இருந்து விரைவில் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சவுக்கு புதிய விசா வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை அங்கு இருக்க விசா வழங்கப்பட்டுள்ளது.
கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு தனது மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








