சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பப்ளிக்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநரான ரா.பரமன் இயக்க, டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான பப்ளிக் திரைப்பட போஸ்டர் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் இணையத்தில் பேசுபொருளானது. பல சுவாரசியங்களை உள்ளடக்கியுள்ளது ‘பப்ளிக்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.
பத்திரிகையாளராக பணியாற்றி தற்போது இயக்குநராக உருவெடுத்துள்ள ரா.பரமன் ஆளுமைகளும் நியூஸ்7 தமிழின் 7 கேள்விகளும் பகுதிக்கு வழங்கிய சிறப்பு பேட்டி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1.பத்திரிகையாளர் பணி, தற்போது இயக்குநர் பணி எப்படி இருக்கிறது இந்த பயணம்?
“பத்திரிகையாளருக்கும் இயக்குநருக்கும் ஒரு சிறிய வேறுபாடுதான் உள்ளது. சமூகத்தில் நடப்பதை உண்மைத்தன்மை மாறாமல் மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பது பத்திரிகையாளரின் பணி, இயக்குநராக அதில் சில கலை நுணுக்கங்களை சேர்த்து திரைக்கதை எழுதினேன். பத்திரிகையாளராக சமூகத்துடன் இணைந்து பணியாற்றியதால் இயக்குநர் பணி எனக்கு எளிதாகதான் இருந்தது”
2. ‘பப்ளிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களின் படத்திற்கு பதில் தலைவர்களின் படங்கள் இடம்பெற காரணம் என்ன?
“ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அறியப்படாத தலைவர்களின் படங்களை தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். ஆரம்பத்தில் எனக்கே அந்த தலைவர்கள் பற்றி ஆழமாக தெரியாது. பின்னர் ஒவ்வொருவர் பற்றியும் ஆய்வு செய்து தேடித்தேடி படித்தேன். அந்த போஸ்டரில் உள்ள தலைவர்களைப் பார்க்கும்போது நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் தோன்றும். ஏனென்றால் நம்முடைய அரசியல் பார்வையானது பரந்துப்பட்டது. அது மாற மாற அந்த போஸ்டரை குறித்த கருத்துகளும் மாறும். இதே பப்ளிக் படத்தின் போஸ்டரை சில நாட்களுக்கு பிறகு பார்த்தால் வேறு கருத்து தோன்றலாம். அதனால் பப்ளிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ஒரு விளக்கம் என்பது சரியானதாக இருக்காது”
3. ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் பற்றி எந்த மாதிரியான விமர்சனங்கள் வந்தது? ஒரு பாஸிடிவ்வான விமர்சனம்? ஒரு நெகடிவ்வான விமர்சனம்?
“இரண்டு வகை விமர்சனமும் அதிகமாக வந்தது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிகிறது. இதுவே ஒரு பெரிய வெற்றிதான். சமூக வலைத்தளங்களில் போஸ்டரில் உள்ள தலைவர்கள் பற்றி விளக்கமாக சிலர் எழுதுவதை பார்க்கும்போது, இந்த தலைமுறையினர்களிடம் அயோத்திதாசர், சிங்காரவேலர், ரெட்டைமலையார் போன்ற சிறந்த தலைவர்களை இவர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி.
நெகட்டிவ்வான விமர்சனம் என்றால் போஸ்டரில் பெரியார், அண்ணா புகைப்படம் இடம்பெறாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த தலைவர்களையும் இதில் குறிப்பிட்டு புறக்கணிக்கவில்லை. இதே போஸ்டரில் மக்களுக்கு பரிட்சயமான தலைவர்களாக கருதப்படும் கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் படங்களை இடம்பெறச் செய்துவிட்டு ரெட்டைமலையாரையோ, அயோத்திதாசரையோ தவிர்த்திருந்தால் இந்த கேள்வியை யாருமே எழுப்பிருக்கமாட்டார்கள். பெரியார், அண்ணா பற்றி அனைவருக்கும் போதுமான அளவு தெரிந்திருக்கிறது. அதனால் ‘பப்ளிக்’போஸ்டரில் குறிப்பிட்டுள்ள தலைவர்களை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், அப்போது நிச்சயமாக ஒவ்வொருவரின் அரசியல் பார்வையும் வேறுபடும்.”
4. சித்தாந்தங்களை சினிமாவில் கொண்டு வரும்போது எந்த மாதிரியான சவால்கள் இருக்கின்றன?
“சித்தாந்தத்தை படமாக்கும்போது அதனை எளிமைப்படுத்தி புரியும் வகையில் மக்களிடையே சேர்ப்பதுதான் இயக்குநருக்கு சவாலானது. ஏனென்றால் எல்லா சமூக மக்களும் படத்தை பார்ப்பார்கள். அனைவருக்கு விளங்கும் வகையில் திரைக்கதையானது இருக்க வேண்டும். இன்னும் விளக்கி சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ ஒரு சித்தாந்தங்களை பின்பற்றுவார்கள். அதனை பற்றிய புரிதல் அவர்களுக்கே சரியாக இருக்காது. நான் ஒரு பத்திரிக்கையாளராக இருக்கும்போது சமூகத்தைப் பற்றி என்னால் வெளிப்படையாக எழுத முடிந்தது. ஆனால் திரைப்படம் இயக்கும்போது அதற்காக சில கலை நுணுக்கங்களை சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அது மட்டுமல்லாமல் பலதரப்பட்ட மக்கள் படத்தை பார்க்கும் போது அவர்களின் கருத்துக்களுக்கு எதிரானதாக திரைக்கதை இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.”
5.‘சமூக பிரச்னை’ சார்ந்த கதைகளம் என்றாலே இயக்குநர்கள் சமுத்திரக்கனியை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் என்ன?
“சமூக பிரச்னை சார்ந்த கதை என்றாலே பெரும்பாலும் சமுத்திரக்கனிதான் நம் நினைவில் வருவார். நான் ‘பப்ளிக்’ படத்தில் சமுத்திரக்கனி இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்கு முன்னர் அவர் சமூக பிரச்னைகளை சுட்டிக்காட்டி பல படங்கள் நடித்திருந்தாலும், இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் மாறுபட்டது. அவரது நடிப்பின் வாயிலாக நிச்சயம் மக்களின் கவனத்தை ஈர்ப்பார்.”
6. படம் எப்போது வெளியாகும்? படப்பிடிப்பு எந்த நிலையில் உள்ளது? படத்தை ஒடிடியில் வெளியிடுவீர்களா?
“படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துவிட்டது, விரைவில் திரைப்படம் வெளியாகும். நான் படத்தை ஒடிடியில் வெளியிடுவதை பெரிதும் வரவேற்கிறேன். ஏனென்றால் இப்போதெல்லாம் திரையரங்குக்கு இணையானதாக ஒடிடி விளங்குகிறது. படங்களை திரையரங்கில் வெளியிடுவதுதான் சவாலாக இருக்கிறது. சிறிய பட்ஜட்டில் உருவான படமாக இருந்தாலும் அதற்கான மகத்தான வரவேற்பு ஓடிடியில் கிடைப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு நல்ல கதைகளம் கொண்ட திரைப்படமானது திரையரங்கின் வாயிலாகவோ அல்லது ஒடிடி தலத்தில் வெளியாகி மக்களை சென்றடைந்தால் போதும்.
7. தொடர்ந்து சமூக பிரச்னைகள் சார்ந்த படங்களைதான் இயக்குவீர்களா? அல்லது வர்த்தகரீதியான பொழுதுபோக்கு திரைப்படங்களும் இயக்குவீர்களா?
“சமூக பிரச்னை சார்ந்த படம் அல்லது வர்த்தகரீதியான பொழுதுபோக்கு திரைப்படம் என்று பிரித்து பார்க்க மாட்டேன். உண்மைத்தன்மை உள்ளதை மக்களிடையே கொண்டுபோய் சேர்க்கும் ஒரு நல்ல படமாக இருந்தால் போதும். அது எந்த வகை படமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.”