ஆட்சி என்பது சுழற்சி போல மாறி மாறி வரும் என்றும், ஆட்சி மாறினாலும், சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள கல்வி மையம் மூலம், முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை வரவேற்று, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த அறிவிப்பினை ரத்து செய்யக் கோரியும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரியும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி இணைப்பு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியதோடு அதுதொடர்பான அரசாணையும் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டம் அமலில் உள்ளதால், அதை பின்பற்ற வேண்டும் எனவும், திருவள்ளுவர் பல்கலைக்கழக அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அந்த சட்டம் அமலில் உள்ளதால் அதன் விதிகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறினர். ஆட்சி என்பது சுழற்சி போல மாறி மாறி வரும் என்றும், ஆட்சி மாறினாலும், சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் விழுப்புரத்தில் உள்ள கல்வி மையத்தின் மூலம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட அதிகாரமில்லை எனவும் கூறிய நீதிபதிகள் அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.