கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சிறப்பான முடிவு எடுப்பார்; எடப்பாடி பழனிச்சாமி முடிவு தான் எங்கள் முடிவு என மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. மதுரை எல்லிஸ் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார், 500-க்கும் மேற்பட்ட அதிமுகவின் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள், பூத்கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் தொகுதி அஇஅதிமுக-வின் முக்கியமான தொகுதியாகும். திருப்பரங்குன்றம் வாக்குச்சாவடி முகவர்களை ஒருசேரப் பார்த்து வாழ்த்து சொல்லும் வாய்ப்பாக இந்நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். நம்முடைய பணி சிறப்பாக இருக்க வேண்டும். இதுதான் நமக்குச் சரியான நேரம் என்றார்.
எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தைக் காக்காவிட்டால் என்றோ வீழ்ந்துபோயிருக்கும். எடப்பாடி பழனிச்சாமியைச் சுற்றி இருக்கக்கூடியவர்கள் எம்ஜிஆரிடம் பயிற்சி பெற்றவர்கள் என்றார்.
மேலும், அதிமுக எல்லா கட்சிகளிடமும் கூட்டணியிலிருந்திருக்கிறது. கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு.கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான முடிவெடுப்பார். எடப்பாடி பழனிசாமி முடிவு தான் எங்கள் முடிவு. அதில் சந்தேகம் இல்லை. அவருக்கு உள்ள திறமை போல் எவருக்கும் இல்லை. எந்தக் கட்சியினராலும் எடை போடமுடியாத தலைவர் எடப்பாடி. இன்னும் இளைஞர்களை அதிமுக ஈர்க்க வேண்டும் என கூறினர்.
அத்துடன், எந்த அதிகாரியும் அமைச்சர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. அமைச்சர்கள் தவறாகப் பேசிவிட்டு பின்னர் மன்னிப்பு கூறும் நிலைமை உள்ளது. திமுகவுடன் தொடர்பு வைத்தவர்களைத் தான் நம் தற்போது ஒதுக்கியுள்ளோம். 62-சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பது சாதாரண விசயம் அல்லஎன்றார்.
மேலும், நமக்கு திமுக மட்டும் ஒரே தான் எதிரி. வீட்டு வரியை உயர்த்திய திமுக தான் நமக்கு எதிரி. பால் விலையை உயர்த்திய திமுக தான் எதிரி. சட்டம் ஒழுங்கை காக்க தவறிய திமுக தான் எதிரி. ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆன பிறகுதான் கட்சியின் நிலைமை மோசமாகும். ஆனால் ஒரே வருடத்தில் தற்போது திமுக மோசமாகவிருக்கிறது எனவும் பேசினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.