மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணானது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு சட்டப்பபேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கோடைகால மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தும், நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் வீணாக்கியிருப்பது வேதனையளிக்கிறது என கூறினார். இதனால், அரசுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நேரடி கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆட்சியில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், புதிய நேரடி கொள்முதல் நிலையங்களை உருவாக்க அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது எனக்கூறிய அவர், எங்கெல்லாம் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டுமோ, அங்கெல்லாம் ஆய்வு செய்து திறக்கப்படும் என தெரிவித்தார். அதே நேரத்தில், ஆன்லைன் மூலம் 1.72 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சக்கரபாணி குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: ‘விமர்சனம்: எப்படி இருக்கிறது பீஸ்ட்?’
மேலும், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மழையால் நனைந்த நெல் மூட்டைகள் உடனடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் சக்கரபாணி, எஞ்சிய அனைத்து நெல் மூட்டைகளும் தார்ப்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக மூடிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.