இபிஎஸ் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க ஆட்சேபனை இல்லை – #DhayanidhiMaranMP பதில் மனு தாக்கல்!

இபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கில் அவரின் கோரிக்கை நியாயமானதாக நீதிமன்றம் கருதினால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தயாநிதி மாறன் எம்பி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது,…

EPS has no objection to exemption from appearing in person - #DhayanidhiMaranMP files reply!

இபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கில் அவரின் கோரிக்கை நியாயமானதாக நீதிமன்றம் கருதினால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தயாநிதி மாறன் எம்பி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

தொகுதி நிதியில் 95 சதவீதம் பயன்படுத்தியதை தொடர்பான தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும்
சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணை வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமியின் மனுவுக்கு பதில் மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனக்கு 70 வயது ஆகிறது என்றும், வயது மூப்பு காரணமாக மருத்தவ காரணங்களால், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததார். எனவே அவரது கோரிக்கை நியாயமானதாக நீதிமன்றம் கருதினால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தயாநிதி மாறன் எம்பி தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கின் மீதான விசாரணையை நீதிபதி வரும் 25ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.