உயிரிழந்த மாணவியின் தாயாரை அழைத்து அரசு சார்பில் பேசி ஆறுதல் கூறியிருந்தால் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் வன்முறை நிகழ்ந்திருக்காது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளியில் 12ம் லகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தத சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சூழல் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அப்போது அவர் குற்றம்சாட்டினார்.
மாணவி இறந்த செய்தி கேட்டு அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் ஆனால் காவல்துறையோ, அரசாங்கமோ அந்த தாய்க்கு ஆறுதல் கூறவில்லை எனத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, மகளை இழந்து வாடுகின்ற தாய் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் எனக் கூறினார்.
இந்த விவகாரத்தில் அரசு முறையாக செயல்படவில்லை எனக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறினார். அரசாங்கம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் செயலிழந்திருப்பதாலும், நீதி கிடைக்காத காரணத்தினாலும் தற்போது அசாதரண சூழல் உருவாகியிள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே மாணவி மரணத்திற்கும் பள்ளிக்கும் தொடர்பில்லை என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது ஏன் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்ககு அடியோடு சீர்குலைந்து விட்டதாகவும் அவர் சாடினார்.
திமுக எப்பவுமே தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியது கிடையாது எனத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வந்தவுடன் வாக்குறுதி கொடுப்பார்கள். பின்னர் அதனை காற்றிலே பறக்கவிடுவார்கள் என காட்டமாகக் கூறினார். இன்று நீட் தேர்வு நடைபெற்றதை சுட்டிக்காட்டி பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறி திமுக கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று எனக் கேள்வி எழுப்பினார்.







