மாணவர்கள் அனைவரும் படிப்பு, படிப்பு, படிப்பு என்று இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைத்து எண்கள், எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் கற்றுத்தரும் “எண்ணும் எழுத்தும்” திட்டம் திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று தொடங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கிவைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள். கல்வி தாகத்தை தீர்க்கும் திட்டமாக எண்ணும் எழுத்தும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில் அரசு பல முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.ஒவ்வொரு குழந்தையும் தனது கற்றல் திறனை மேம்படுத்தவே எண்ணும் எழுத்தும் திட்டம், இதற்காக கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது, உயர்மட்டக் குழு, எண்ணும் எழுத்தும் திட்டத்தை செம்மைப்படுத்தும் என்ற முதலமைச்சர்,
“திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையான சமூக நீதி என்பது கல்விக்கு முக்கியத்துவம் தருவது தான். தொடக்கக் கல்வியை வெறும் கல்வியாக மட்டும் பார்க்க முடியாது. சமூகத்தின் திறவுகோலாக இருப்பது தொடக்கக் கல்வி தான். தொடக்கக் கல்வி முறையாக கிடைத்தால், அதன் பின் அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதற்காகவே எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் 2025-ம் ஆண்டுக்குள் பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இலக்கு” என்று விளக்கினார்.
மேலும், “கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த சொத்தை உருவாக்கும் திட்டம் தான் இது. இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், கல்வித் தொலைக்காட்சி வரிசையில் எண்ணும் எழுத்தும் திட்டமும் இணைந்துள்ளது. கல்வியால் வரும் பெருமையை எதனாலும் அழிக்க முடியாது. கல்வி மீதான உரிமை போராடிப் பெற்றது. படிக்காமலே சாதிக்கலாம் என்று சொல்வது ஆசை வார்த்தை. முதலமைச்சராக இல்லாமல், தந்தையாக கேட்கிறேன். குழந்தைகள், மாணவர்கள் அனைவரும் படிப்பு, படிப்பு,படிப்பு என்று இருக்க வேண்டும்” என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.