தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 75 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, 234 தொகுதிகளிலும் கடந்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தமுள்ள 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்களில், 4 கோடியே 57 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக, தமிழகத்தில் 75 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாக்குகள் எண்ணுவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேசையிலும் 500 வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாகுக்கள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகும், முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அதிகாரிகள், அலுவலர்கள், வேட்பாளர்கள், கட்சிகளின் முகவர்கள் என அனைவருக்கும், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லை என்ற சான்று கொண்டவர்கள் மட்டுமே, வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், மூன்றாம் அடுக்கு பாதுகாப்பில் உள்ளூர் போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும் நிறுத்தப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில், 1 லட்சத்து 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.