யாருடையது உண்மையான சிவசேனா? – ஆதாரங்களை தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவு

இரு அணிகளில் எது உண்மையான சிவசேனா என்பதற்கு உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசியலில் கடந்த மாதம் ஏற்பட்ட…

இரு அணிகளில் எது உண்மையான சிவசேனா என்பதற்கு உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த மாதம் ஏற்பட்ட பிரச்னையில் சிவசேனா இரண்டாகப் பிரிந்தது. சிவசேனா அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக அரசு பதவியேற்று இருக்கிறது. துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுள்ளார். தற்போது இந்த இரு அணியில் யாருடையது உண்மையான சிவசேனா அணி என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேயிக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களிடம் பெரும்பான்மையான ஆதரவு உள்ளது. சட்டமன்றம் மற்றும் மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்தவர்களையே உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணியில் ஏக்நாத் ஷிண்டே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தங்களுக்கு கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று  தேர்தல் கமிஷனில் ஏக்நாத் ஷிண்டே அணி சார்பில் இரு நாள்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்கு மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரும், மக்களவையில் மொத்தமுள்ள 18 பேரில் 12 பேரும் ஆதரவாக இருப்பதால் தேர்தல் கமிஷன் சட்டப்பிரிவு 15இன் கீழ் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். உத்தவ் தாக்கரே தரப்பில் கட்சியின் மூத்த தலைவர் அனில் தேசாய் தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் கட்சியின் சின்னத்தையோ அல்லது பால் தாக்கரே பெயரையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகிய அணிகளில் எந்த அணி உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது. இக்கடிதத்திற்கு ஆகஸ்ட் 8ம் தேதி பிற்பகல் 1 மணிக்குள் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு அணியினரும் தங்களுடைய அணிதான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதில் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.