கர்நாடக சட்டமன்ற தேர்தலில், புலிகேசி நகர் தொகுதியில், அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 13 ஆம் தேதி, இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. அண்மைக் காலமாக சீட் தராத அதிருப்தியில் பல தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இனைந்து வருகின்றனர். அவ்வாறு இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு, ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியை காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையும் படியுங்கள் : 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது கர்நாடக காங்கிரஸ் – ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தார்வாட் தொகுதி ஒதுக்கீடு!
இவ்வாறாக கர்நாடக அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான ரேசில், அதிமுகவும் இணைந்துள்ளது. கர்நாடக மாநிலம், புலிகேசி நகர் தொகுதியில், அதிமுக சார்பில் கர்நாடக மாநில கழக அவைத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புலிகேசி நகர் தொகுதியில் ஏற்கனவே பாஜக சார்பில் முரளி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவும் அந்த தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. இதன்மூலம் தனித் தொகுதியான புலிகேசி நகரில், கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிடுகின்றது.