மணிப்பூரில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
வட இந்திய மாநிலங்களில் அண்மைக்காலமாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் மக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்குவதாக அமைந்துள்ளது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இரவு 11.11 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் குலுங்கியது. இதனால் நள்ளிரவில் மக்கள் திடுக்கிடும் சூழல் எழுந்துள்ளது. மேலும் பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து நின்றதையும் காண முடிந்தது. சுமார் 20 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக நேற்று அதிகாலை வங்காள விரிகுடா கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியிருந்த அந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மணிப்பூரில் சில மணி நேரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேதேபால், கடந்த ஜூலை 21-ம் தேதி அன்று உக்ருல் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களுக்கு கூடுதல் அச்சத்தை கொடுப்பதாக அமைந்துள்ளது.







