அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்று கொண்டாடப்பட்ட இந்த விழாவில், இதில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை தலைவர் ஓம் பிர்லா மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, அம்பேத்கர் பரிசளித்த அரசியல் சாசனத்தை நாம் எப்போதும் நினைவுகூர்ந்து மரியாதை செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் ஜனநாயகத் தன்மையை இழக்கும்போது அரசியல் சாசனத்தின் ஆன்மா புண்படுகிறது; உள்கட்சி ஜனநாயகத்தைப் பின்பற்றாத அரசியல் கட்சிகளால், நாட்டின் ஜனநாயகத்தை எப்படி பாதுகாக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்துத் துறைகளிலும் நாடு வளர்ச்சியடைந்துள் ளது என்று தெரிவித்த அவர், இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதலை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் சொன்னார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல கட்சிகள், வாரிசு அரசியல் நடத்துகின்றன; இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.
நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டதில் அம்பேத்கரின் சேவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அரசியல் சாசனம் நிரூபிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அரசியலமைப்பு சட்டத்தை அவமரியாதை செய்து வருவதாகக் குற்றம் சாட்டி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளன.