குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் அரசியல் அடிப்படையில் அல்லாமல் கொள்கை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா, இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசியலமைப்பு சட்டம் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருவதாகக் கூறினார். பல்வேறு கலாச்சாரங்கள், இனங்கள், மொழிகள் கொண்ட நாடான இந்தியாவில், அரசியலமைப்பு சட்டங்களை காப்பாற்றக்கூடிய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அற்ற ஒருவர் குடியரசு தலைவராக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், யஷ்வந்த் சின்கா எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைதொடர்ந்து பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா,
நடைபெறுகிற தேர்தல் இரண்டு தனி நபர்களுக்கு இடையே நடைபெறும் தேர்தல் அல்ல. இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே நடைபெறுவது என கூறினார். ஆர்.எஸ்.எஸ். பின்பற்றுகிற சனாதன கொள்கைக்கும், தாங்கள் பின்பற்றுகிற மதச்சார்பின்மை கொள்கைக்கு இடையே தேர்தல் நடைபெறுவதாக டி.ராஜா தெரிவித்தார். அரசியல் அடிப்படையில் அல்லாமல் கொள்கை அடிப்படையில் இந்த தேர்தலை அணுக வேண்டும் என்றும் டி.ராஜா தெரிவித்தார். பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கூட்டணிக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து போராட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து யஸ்வந்த் சின்ஹாவை குடியரசு தேர்தலில் களமிறக்கியிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாதி-மத அடிப்படையிலான அடையாளங்களை முன்னிறுத்துகிற நிலையில் அதற்கு மாற்றாக கொள்கை, கோட்பாடு ஆகியவற்றை அடையாளங்களாக முன்நிறுத்துகிற முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார். நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தல், இரண்டு தத்துவங்கள், கோட்பாடுகள் இடையே நடைபெறும் போட்டி. மதச்சார்பின்மை மற்றும் மதர்சார்புக்கு இடையே நடைபெறும் போட்டி என்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி யஷ்வந்த் சின்ஹாவை முழுமையாக ஆதரிக்கிறது என அக்கட்யின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.