அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றிய சூரப்பா, கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்தை கவனித்து வந்தது. இதற்கிடையே துணைவேந்தருக்கான நேர்காணல் நடைபெற்று வந்த நிலையில், வேல்ராஜை துணை வேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அண்ணா பல்கலைக் கழக பேராசிரியராக தற்போது பணியாற்றி வரும் வேல்ராஜ் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் சூரப்பா துணை வேந்தராக நியமிக்கப்பட்டபோது அவர் தமிழர் அல்லாதவர் என்றும், தமிழ்நாட்டில் எத்தனையோ தகுதியானவர்கள் இருக்கும்போது, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக நியமித்தது ஏன் என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் கேள்வி எழுப்பினர். மேலும் சூரப்பா மீது முறைகேடு புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் முனைவர் வேல்ராஜை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமித்திருப்பதற்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் ஊழல் அற்ற, தமிழரான ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி எனவும் முனைவர் வேல்ராஜின் கீழ், அண்ணா பல்கலைக்கழகம் புதிய உயரத்தை அடையும் எனவும் வேல்ராஜை துணைவேந்தராக தேர்வு செய்த ஆளுநர், முதலமைச்சர், உயர்கல்வி அமைச்சர் ஆகியோருக்கு நன்றி எனவும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.