தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் விடுதிகளை ஆய்வு செய்யும் பணிகள் ஒரிரு நாட்களில் தொடங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற கண்காட்சியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். மேலும் கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், “பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பாதுகாக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்றும் போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு வீடு வீடாக சென்று விழிப்புணர்வு செய்யப்படுகிறது என்றார்.
பள்ளி இடை நிற்றல் காரணமாக இளம் சிறார் குற்றவாளிகள் உருவாகிறார்கள். போதைப் பொருள் பயன்படுத்துவது இளம் சிறார்களிடம் அதிகமாகி வருகிறது. இளம் சிறார்கள் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தை பிச்சைக்காரர்கள் உருவாவதை தடுக்க பெற்றோர்கள் ஒத்துழைப்பு வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி விடுதிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் ஒரிரு நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் விடுதிகள் ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்படும், சமூக நலத்துறை, பள்ளி கல்வித்துறை இணைத்து இந்த ஆய்வுகளை நடத்த உள்ளது. குழந்தைகள் மீது அழுத்தத்தை திணிக்க கூடாது என்றும் குழந்தைகள் விருப்பப்பட்டதை செய்ய பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








