நல்ல சினிமாக்களைக் கைவிட்டுவிடாதீர்கள் -கமல்ஹாசன்

ஒடிடி வருவதை முன்பே கூறியிருந்தேன் வந்திருக்கிறது, திரையரங்குகளில் விரைவில் உணவகம் வரப்போகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை கே.ஜி திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்…

ஒடிடி வருவதை முன்பே கூறியிருந்தேன் வந்திருக்கிறது, திரையரங்குகளில் விரைவில் உணவகம் வரப்போகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை கே.ஜி திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், ரெட்ஜெயன்ட் மூவீஸ் செண்பக மூர்த்தி, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . இந்த விழாவிற்கு வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரையரங்க ஊழியர்களுக்கு நினைவு பரிசுகளை கமல்ஹாசன் வழங்கி பின்னர் நிகழ்வில் பேசினார்.


’சினிமாவில் நடித்த ஆரம்பத்தில், என்னை நீதான அந்த புள்ளைன்னு’ கேட்ட போது மகிழ்ச்சி அளித்தது. ஆனால் ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. போஸ்டர்களைக் கூட நின்று பார்த்துள்ளேன், பின்பு அதை மாற்ற நன்கு உழைத்தேன் எனக் கூறினார். மேலும் சினிமாவில் சாதித்தது எனக்காக மட்டும் என பெருமை பீத்திக்கொள்ள முடியாது, அதற்கு காரணம் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களால் இன்றும் தன்மீது அன்பு மழை பொழிவதாக தெரிவித்தார். இது எனக்கானது என நான் நினைத்தால், என்னை விட முட்டாள் வேறு யாரும் கிடையாது. எனது திறமைக்கு கண்டிப்பாக இடம் கொடுத்துள்ளீர்கள் அதற்கு நன்றி எனத் தெரிவித்தார்.

 

ஓடிடி காலகட்டத்திலும் பழைய திரையரங்குகளை மல்டி ப்ளை தியேட்டர்களாக மாற்றி இளைஞர்கள் முன் வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒடிடி குறித்து முன்கூட்டியே சொல்லியிருந்தேன் இப்போது வந்திருக்கிறது, நான் கூறிய திட்டங்களில் சில செயல்படுத்த முடியாது. மேலும் சில திட்டங்களை கேட்டாலே பயப்படுகிறார்கள் என தெரிவித்தார். விரைவில் திரையரங்குளில் உணவகம் வரப்போகிறது, அமெரிக்காவில் அதை செய்து வருகிறார்கள், உணவகமும் தொழில் தான், எந்த நிலையிலும் சினிமாவின் மவுஸ் இன்னும் குறையவில்லை என்றார்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போன்று, சினிமாவும் என்னை 63 ஆண்டு காலமாக வாழ வைத்துள்ளது. நல்ல சினிமாக்களை கை விட்டுவிடாதீர்கள், அற்புதமான இயக்குநர்களை கைவிட்டுவிடாதீர்கள்,நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள், மக்கள் வாழ்த்தினால் எங்கள் வீட்டில் பொன்மழை பொழியும். நல்ல நடிகரை தூக்கிப்பிடித்து நிறுத்துங்கள், எங்கள் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும் எனப் பேசினார்.

 

வட இந்திய சினிமாவில் இருந்து தென்னிந்திய சினிமா பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பிவிட்டது. வெறும் விமர்சனங்கள் சொல்வது போதாது எனக்கூறியவர் என் குடும்பமும் சினிமாவில் தான் இருக்கிறது. புதிதாக வரக்கூடிய நடிகர்களை கூர்ந்து கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன்.

எனக்கு பிடித்த ஊர் கோவை, கோவையில் விக்ரம் பட க்ளைமேக்ஸ் எடுக்குபோது எனக்கு கோவிட் வந்து விட்டது. ராஜ்கமல் 53-வது படத்தை தயாரித்து வருகிறது. குறைந்த காலக்கட்டத்தில் 100 வது திரைப்படத்தை தயாரிக்க வேண்டுமென நினைக்கிறேன். அது பேராசை கிடையாது என பல ஜாம்பவான்களும் இதை செய்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

வெற்றியை நான் மட்டும் கொண்டாடுவதை விட அனைவருடனும் கொண்டாடுவதுதான் மரியாதை என தெரிவித்தார். மேலும் சீனாவில் 50 ஆயிரம் சினிமா தியேட்டர்கள் உள்ளது,அதற்கேற்ற கூட்டமும் அங்கே உள்ளது, இங்கேயும் கூட்டம் இருக்கிறது, அதனால் இன்னும் தியேட்டகள் கட்ட வேண்டும். சினிமா வளர வேண்டும் வளர்ந்தால் நாங்கள் வாழலாம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

 

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.