டான் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது, இந்த படம் முதலில் தனக்கு தான் வந்தது என்றும் தான் நடிக்க மறுத்து விட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சூரி, உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், Don படத்தின் கதையை முதலில் இயக்குனர் தன்னிடம் தான் சொன்னார் என்றார். தான் கதை கேட்டு விட்டு நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டதாகவும், படம் பார்த்து விட்டு இரண்டாம் பாதியில் கடைசி 1 மணி நேரத்திற்காகவே இந்த படம் ஓடும் என்று சொன்னேன் என்றும் உதயநிதி கூறினார். என்னால் பள்ளி காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால், படத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டேன் என்ற அவர், விரைவில் இந்தியன் 2 படம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த படத்திற்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
பின்னர் பேசிய இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, இந்த படம் ஒரு மகனையாவது மாற்றும் என்று நினைத்தேன். ஆனால் நிறைய மகன்களை மாற்றி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். வெள்ளைகாரனிடம் வேலை பார்ப்பதை எல்லாரும் பெருமையாக நினைத்து கொண்டு இருக்கும் போது சுபாஷ்கரன் மட்டும் தான் இவர் இல்லை என்றால் வெள்ளகாரர்களுக்கு வேலை இல்லை என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறார். படம் ஆரம்பிக்கும் போது அவநம்பிக்கை ஏற்பட்டதாக தெரிவித்த அவர், முதல் முறையாக படம் இயக்க நினைக்கும் இயக்குனர்கள் சொல்லும் கதையை முழுமையாக கேட்க வேண்டும் என தமிழ் சினிமா நடிகர்களுக்கு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி வேண்டுகோள் வைத்தார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது, முதல் படத்திலேயே சதம் அடித்துள்ளார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என கூறினார். விக்னேஷ் சிவன் கல்யாணத்துக்கு வாழ்த்து சொன்ன அனிருத் இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது, சிங்கிள் வாழ்க்கையை Enjoy பண்ணிக்கோங்க விக்னேஷ் என்றார். ஒரு படம் ஓடுமா ஓடாதா என்று உதயநிதி ஸ்டாலின் சரியாக ஆக சொல்லிவிடுவார் என்றும் தெரிவித்தார்.
எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, முதல் 5 இடங்களில் இருக்கும் தமிழ் சினிமா நடிகர்களில் சிவகார்த்திகேயன் நிரந்தரமான இடத்தை பிடித்துள்ளார் என தெரிவித்தார். தளபதி படத்தில் போட்ட ஒரு பாடல் தான்.. அந்த பாடலை வட மாநிலத்தவர்கள் கூட ரீல்ஸ் செய்து போடுகிறார்கள்.. அனிருத் ஒரு இசை குழந்தை என்றும் புகழாரம் சூட்டினார்.
நடிகர் சூரி பேசியபோது, தம்பிக்கு (சிவகார்த்திகேயன்) பக்கத்தில் இப்படி இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். படப்பிடிப்பில் சில சங்கடம் இருந்ததாகவும், அத்தனை கேமரா வைத்து படம் எடுத்தார்கள். எத்தனை முறை தான் எடுப்பார் சண்டாளன் அத்தனை முறை எடுத்தார் என நகைச்சுவையாக பேசினார். மனம் கொத்தி பறவையில் என்னை அண்ணா என்று அழைத்த சிவா இன்று வரை சிறிது கூட மாறாமல் உள்ளார். சிவாவிடம் நல்ல மனசு உள்ளது. அதனால் தான் அவர் இந்த இடத்தில் உள்ளார். இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கிறார் என்றும் சூரி கூறினார்.
பின்னர் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், டான் திரைப்படம் இவ்ளோ பெரிய வெற்றி அடையும் என்று நினைக்கவே இல்லை என்றார். படத்தின் நேர அளவை குறைந்தால் நன்றாக இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் எண்ணினார். நாங்களும் அனைத்து விதத்திலும் முயற்சி செய்தோம் ஆனால் குறைக்கவே முடியவில்லை. சேலத்தில் ஒரு திரையரங்கில் படம் பார்த்து விட்டு இரவு அழைத்து படம் வேற லெவல் இருக்கு என்று உதயநிதி பாராட்டினார்.
படம் வசூலித்த 100 கோடி lyca நிறுவனத்திற்கும், ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கும் தான் எனக்கு எதுவும் வராது. படத்தில் விலங்குகள் துன்புறுத்த படவில்லை, நடிகர்கள் மட்டும் தான் துன்புறுத்த பட்டிருக்கிறார்கள் என கூறினார். மேலும் நடிகர் ரஜினிகாந்துககு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் 60 நிமிடம் எங்களுக்கு நேரம் செலவலித்து இந்த படத்தின் வெற்றியை முழுமையாக்கினார் என்றார்.
– இரா.நம்பிராஜன்








