“யோகா செய்தால் மனித நேயம் அதிகரிக்கும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

“யோகா செய்தால் சமுதாயத்தின் மீதான அக்கறை, மனித நேயம் அதிகரிக்கும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் 8வது உலக யோகா தின நிகழ்ச்சி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி…

“யோகா செய்தால் சமுதாயத்தின் மீதான அக்கறை, மனித நேயம் அதிகரிக்கும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் 8வது உலக யோகா தின நிகழ்ச்சி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் 12 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் மற்றும் ஈஷா யோகா, Art Of Living அமைப்பை சேர்ந்த தானார்வலர்கள் பங்கேற்றனர்.

1,000 பேர் பங்கேற்ற இந்த நிகழ்வில் உரையாற்றி ஆளுநர், அனைவருக்கும் யோகா தின வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ரிஷிகளும் சித்தர்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யோகாவை நமக்கு அளித்தனர். மத இனம் பேதங்களுக்கு அப்பாற்பட்டது யோகா. உலகின் பல்வேறு இடங்களில் இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

யோகி சித்தர் திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருமந்திரத்தை உருவாக்கினார். ஒரு மணி நேர நிகழ்ச்சியாக இல்லாமல் நமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக யோகா இருக்க வேண்டும். யோகா தமிழகத்தில் இருந்து பிறந்துள்ளது என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.

யோகாவை ஒரு நபர் கண்டுபிடிக்கவில்லை,பல சித்தர்கள் ரிஷிகள் இதற்காக பங்காற்றி உள்ளனர் அதில் முக்கியமானவர்கள் தமிழகத்தை சார்ந்தவர்களாக உள்ளனர்” என்று கூறினார்.

மேலும், “யோகா உடல் அளவில் மட்டும் இல்லாமல் மனதளவிலும் நம்மை வலிமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஒருவர் யோகா செய்தால் அவர்களுக்கு சமுதாயத்தின் மீதான அக்கறை மனித நேயம் அதிகரிக்கும்” என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.