ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் இயக்குநர் நெல்சனின் அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான சம்பளம் அதிவேகமாக உயர்த்தியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நெல்சன் அறிமுகமானார். நயன்தாரா நடிப்பில் உருவான அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கினார். இதுவும் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதனால் நெல்சன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதோடு தனது திரைப்படம் பார்க்க வந்தால் இரண்டரை மணி நேரம் சிரிப்பு உறுதி என்பதை தமது படைப்புகள் வாயிலாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, நடிகர் விஜயுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன் ரசிகர்களின் கிண்டலுக்கு நெல்சன் ஆளானார். தற்போது, நெல்சன் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக உருமாறியுள்ளது. இப்படத்திற்கு நெல்சன் ரூ.22 கோடி சம்பளமாகப் பெற்றார் எனக் கூறுகிறார்கள்.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக, நெல்சனுக்கு சம்பளமாக ரூ.55 கோடி கொடுக்கவும் அந்நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் வசூலால் நெல்சனின் சம்பளம் அதிவேகமாக உயர்ந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.







