சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிங்கப்பூர் அமைச்சர் கே.சண்முகம் கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தை சந்தித்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்பின்போது, சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் “ கொள்முதல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கான முறை (Methodology for Assessing Procurement Systems) முன்முயற்சியின் மூலம் தமிழ்நாடு தொழில்கள், சேவை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் இணையப் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஆதரவை விரிவுபடுத்துதல், மாநில நிறுவனங்களுக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், தரவு தனியுரிமை அம்சங்கள் போன்றவற்றில் அரசு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பது” ஆகியவை குறித்து, தமிழ்நாடு முதலமைச்சருடன் உரையாடினார்.
சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
எஸ். கிருஷ்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதன் பின்னர் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் அமைச்சர் கே.சண்முகத்தை தமிழ்நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் நாட்டின்
ஒசாகா நகரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்படுகிறார்.







