சாகித்ய அகாடமி விருது தனக்கு தாமதமாக வழங்கப்பட்டாலும் அதில் மகிழ்ச்சிதான் என்று எழுத்தாளர் இமையம் தெரிவித்தார்.
சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, மத்திய அரசால் ஆண்டு தோறும் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன், பரிசுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், தாமிர பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான படைப்புக்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பிரபல தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருது அவரின் செல்லாத பணம்’ என்ற நாவலுக்கு கிடைத்தது. டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருதுபெற்ற பின் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த எழுத்தாளர் இமையம், தாமதமாக தமக்கு விருது வழங்கப்பட்டாலும், அதில் மகிழ்ச்சிதான் என தெரிவித்தார். 6 நாவல்கள், 6 சிறுகதை தொகுப்புகள், ஒரு நெடுங்கதை ஆகியவற்றை எழுதியிருப்பதாகவும், தமது படைப்புகள் வாயிலாக தமிழ்ச் சமூகத்தின் முகங்களை காட்ட முயற்சி செய்திருப் பதாகவும் தெரிவித்தார்.







