“திமுக ஆட்சிக்கு பின் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

திமுக ஆட்சி அமைந்த பின் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் 66 படுக்கை வசதி கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “டெங்கு காய்ச்சலால் கடந்த 2012 ம் ஆண்டு 66 பேரும், 2017ல் 65 பேரும் உயிரிழந்துள்ளனர்.

திமுக அரசு ஆட்சி அமைந்த பின் டெங்கு பாதிப்பு மிக மிக கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 18 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். நலமுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இதுவரை 13 முகாம்கள் முடிவடைந்துள்ளது.

1256 முகாம்களில் 484 முகாம்கள் நிறைவடைந்த நிலையில் இதுவரை 7,73,717 பேர் பயன் பெற்றுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பயமில்லை, பதட்டமில்லை தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.