அவதூறு செய்தி… டி.ஆர்.பாலுவுக்கு மான நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் வழங்க பிரபல வார இதழுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அவதூறு செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் வார இதழ், முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலுவுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜூனியர் விகடன் வார இதழில், கேள்வி பதில் பகுதியில் சேது சமுத்திரத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், திமுக செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பேசியதாகவும் அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பியுமான டிஆர் பாலு, ஜூனியர் விகடன் இதழுக்கு எதிராக கடந்த 2014ஆம் ஆண்டு சிவில் மான நஷ்டஈடு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடப்பட்டதாகவும், இந்த செய்திகள் முழுக்க அவதூறு செய்தி எனவும், ஆதாரமற்றவை என்றும் தன்னைப் பற்றியோ தனது குடும்பத்தினரை பற்றியோ செய்திகளை வெளியிட ஜூனியர் விகடனுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிஆர் பாலு தொடர்பான செய்திகள் வெளியிட ஜூனியர் விகடன் வார இதழுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், டி ஆர் பாலுவுக்கு மான நஷ்ட ஈடாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஜூனியர் விகடன் வார இதழுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.