அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட்டுக்கு கடந்த ஜனவரி மாதம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட்டுக்கு (57) கடந்த ஜனவரி 7-ம் தேதி தனியார் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மருத்துவ உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணம், அவருக்கு பன்றியின் இருதயம் அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டதுதான். பன்றியின் உடல் உறுப்புகளை மருந்து தயாரிப்புகளுக்கு பயன்படுத்தி வந்த நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த காலங்களில் பல முறை விலங்குகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்த மருத்துவர்கள் முயற்சித்தும், அதை மனித உடல் ஏற்றுக்கொள்ளாமல் தோல்வியிலேயே முடிந்தது. இதனோடு ஒப்பிட்டு பார்த்தால், டேவிட் பென்னட்டின் உடல் அதிக நாட்களுக்கு பன்றியின் இருதயத்தை ஏற்று கொண்டிருந்தது. மேலும், மருத்துவ நிபுணர்களுக்கு மரபணுவில் ஆராய்ச்சி செய்து விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையையும் இது ஏற்படுத்தியது.
டேவிட் பென்னட்டின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அறிவித்து வந்த மருத்துவமனை, சில நாட்களாகவே அவரின் உடல்நிலை மோசமடைந்து வந்ததாக தெரிவித்தது. இந்நிலையில், கடந்த 8-ம் தேதியன்று அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டேவிட் பென்னட்டின் மகன், சிகிச்சையின்போதே தனது தந்தைக்கு உயிர் பிழைக்கும் நம்பிக்கை இல்லை என்று கூறினார்.
பென்னட்டுக்கு பன்றியின் இருதயம் பொருத்தப்பட்டு அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால், இந்த அறுவை சிகிச்சை மருத்துவத்துறையில் ஒரு புரட்சியாக பார்க்கப்பட்டது. உலகளவில் இருக்கும் மருத்துவ நிபுணர்கள், அவரின் அறுவை சிகிச்சை குறித்த அனைத்து விவரங்களையும் மருத்துவமனை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.