மத்திய பிரதேச அமைச்சரின் எச்சரிக்கையை தொடர்ந்து டாபர் நிறுவனம் ஓரினச் சேர்க்கையாளர்களை மையமாக வைத்து உருவாக்கிய விளம்பரத்தை நீக்கி உள்ளது.
வடமாநிலத்தில் இந்து மதத்தினர் ‘கர்வா சவுத்’ என்ற பண்டிகையை பரவலாக கொண்டாடடுகிறார்கள். பெண்கள் விரதம் இருந்து, வட்டமான பாத்திரம் போல் இருக்கும் தட்டில் எதிரில் நிற்கும் கணவரை பார்த்து தனது விரதத்தை முடித்து கொள்வார்கள். இந்த பண்டிகையை மையமாக வைத்து டாபர் நிறுவனம் அதன் ‘ஃபெம் பிலீச்’ என்ற அழகு சாதன பொருளுக்கு விளம்பரம் செய்தது. இந்த விளம்பரத்தில் கர்வா சவுத் பண்டிகையை இரு பெண்கள் விரதம் இருந்து, ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு விரதத்தை முடித்துக்கொள்வதுபோல காட்சியமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி முடிந்தவுடன் ‘ஃபெம் பிலீச்’ பயன்படுத்தி அழகாக ஜொளிக்கவும் என்ற வாசகம் வருவதாக இந்த விளம்பரம் அமைந்துள்ளது.
டாபர் நிறுவனத்தின் இந்த விளம்பரத்திற்கு சமூகவலைதளங்களில் ஆதரவு இருந்தாலும், கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விளம்பரம் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என்றும் விளம்பரத்தை உடனடியாக நீக்க அம்மாநில டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து டாபர் நிறுவனம் சமூகவலைதளங்கில் அந்த விளம்பரத்தை நீக்கியதுடன் மன்னிப்பும் கேட்டுள்ளது.








