மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த எழுத்தாளரும், விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யாவின் சகோதரருமான என்.ராமகிருஷ்ணன் நேற்று இரவு மதுரையில் காலமானார். அவருக்கு வயது 82.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு (ஆங்கிலம்), தமிழக கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு, தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், மாவட்ட வரலாறுகள், தனிநூல்கள் என இதுவரை 96 நூல்களை என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.
இவர், எழுதிய மார்க்ஸ்-பெரியார்-அம்பேத்கர் என்ற நூல் பெரிதும் குறிப்பிடத்தக்கதாகும். அண்மையில் தஞ்சை மாவட்ட போராளிகள்-பொதும்பு வீரணன் வரலாறு நூலை வெளியிட்டார். எழுத்து வருமானத்திலேயே சிரமத்துடன் வாழ்ந்து வந்த இவருக்கு மகனும் மகளும் உள்ளனர். மனைவி இறந்தபின் மதுரை ‘தீக்கதிர்’ நாளிதழ் அலுவலகத்தில் தங்கியிருந்து எழுதிவந்தார்.

நீரிழிவு நோயினால் கடும் அவதிப்பட்டு வாழ்ந்த ராமகிருஷ்ணன், பாசிசம் பற்றி நுால் ஒன்றை எழுதி அதை கட்சியின் மாநில மாநாட்டில் வெளியிடும் முயற்சியில் இருந்தார்.
1964களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சிபிஎம் பிரிந்தபின் டில்லியில் மத்தியக்குழு பார்லிமென்ட் அலுவலகங்களில் 12 ஆண்டுகள் பணியாற்றிய ராமகிருஷ்ணன், சிபிஎம் வரலாற்றினை அனுபவ ரீதியாக நன்கு அறிந்த வெகு சிலரில் ஒருவராவார். இவர் தனது வாழ்நாளில் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







