நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி உள்ளவர்களை வெளியேற்றி அந்த வீடுகளை இடிக்க
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாகவும், நீதிமன்றங்களும்
நீதிபதி குடியிருப்பும் நீர்நிலை புறம்போக்கில் தான் உள்ளது அதை யார் கேட்பது?
என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி
எழுப்பி உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு முடிவுகளை விளக்கி சிறப்பு
பேரவை கூட்டம் இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து
கொள்ள மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருகை புரிந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி உள்ளவர்களை உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். அந்த வீடுகளை இடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டுள்ளது.
இவற்றை இடிக்க யார் உத்தரவு போடுவார்கள். நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்கிறதா? இதுபோன்ற போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதே நிலை நீடித்தால் நீதிமன்றங்களை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும். பாராளுமன்றத்தின் நிலை குழுவுக்கு அனுப்பப்பட்ட மின்சார சட்டம் 2022
நிறைவேற்றக்கூடாது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் மின்சாரத் துறை தனியாரிடம் சென்று விடும், மேலும் தமிழ்நாட்டிலுள்ள 22 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் பாதிக்கப்படும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது ரத்தாகும், மேலும் தனியார் சொல்லும் மின் கட்டணம் செலுத்தி ஆக வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும். இந்த மின்சார சட்டத்தை நிறைவேற்றக் கூடாது
என்பதற்காக தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு இயக்கத்தை உருவாக்க உள்ளது என்றார் கே.பாலகிருஷ்ணன்.
இந்த கூட்டத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு மற்றும்
கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.








