கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்ததாக தொடர்ப்பட்டட வழக்கில், மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தியை விரைந்து கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் கூலி தொழிலாளியிடம் 10 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு, நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு பதியப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் காவல் ஆய்வாளரை இன்னமும் கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுபோல தாமதம் ஆவது மனுதாரருக்கு சாதகமாக அமைந்து விடாதா? எனவும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
இதுபோன்ற செயல்களால் பொதுமக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை குறைந்துவிடும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, காவல் ஆய்வாளர் வசந்தி, ஓட்டுநர் ஆகியோரை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், அரசு பணியாளர்கள் முறை கேடுகளில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க இயலாது எனக்கூறிய நீதிபதி, காவல் ஆய்வாளர் வசந்திக்கு எதிரான ஆவணங்களை முறையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, முன்ஜாமீன் வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.







