இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களை சேர்க்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது
இந்தியாவில் கொரோனா 2வது அலையால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து, ஆக்ஸிஜன் விநியோகம், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம், கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம் உள்ளிட்டவை தொடர்பாக, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. இந்த வழக்கு, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசியை வழங்கும் மத்திய அரசு, அதற்கு கீழ் உள்ள வயதினருக்கு மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறுவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 18 முதல் 44 வயதுடைய மாற்றுத்திறனாளிகளை, மத்திய அரசின் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் சேர்க்காதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனைவருக்குமான தடுப்பூசி எப்போது செலுத்தி முடிக்கப்படும்? என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், கொரோனா தடுப்பூசிக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்தது ஏன்? என்றும், மத்திய அரசுக்கு ஒரு விலையிலும், மாநில அரசுகளுக்கு ஒரு விலையிலும் தடுப்பூசி விலை நிர்ணயிக்கப்படுவது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உச்சநீதிமன்றத்தின் இந்த சரமாரியான கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான அனைவருக்கும் நடப்பாண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார். மேலும், தடுப்பூசி விலை தொடர்பாக, தயாரிப்பு நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அது குறித்த விவகாரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்வதாகவும் துஷார் மேத்தா தெரிவித்தார்.