சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக அவர் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் பணி என தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர் மீது மீது டெல்லி ஹவுஸ் ஹாஸ் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும், மத குழுக்களிடையே பகைமையை வளர்க்கும் முயற்சிக்காகவும் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அமிதா சச்தேவா என்பவர் புகார் அளித்துள்ளார்.







