சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக பிரபல யூடியூபர் மாரிதாஸை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள பிரபல யூ ட்யூபர்களில் ஒருவரான மாரிதாஸ், தனது யூ டியூப் சேனலில் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தமிழ்நாட்டையும், காஷ்மீரையும் ஒப்பிட்டு, அவரது ட்விட்டர் பக்கத்தில் மாரிதாஸ், சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/news7tamil/status/1468888391332753410
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அதே சமயத்தில், மாரிதாசை கைது செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் பா.ஜ.க.வினரும், மாரிதாசின் ஆதரவாளர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். அங்கு போலீசார் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.
தொடர்ந்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார், மாரிதாசை, 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன், மாரிதாஸை போலீசார் அத்துமீறி கைது செய்துள்ளனர் எனவும் எதற்காக கைது செய்தார்கள் என எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை என கூறினார்.








